அன்று பிரேமதாச ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவியபோது, வெள்ளைக்கார பெண்களுக்கு உள்ளாடைகளை தைக்கிறார் என கூறியவர்கள் இன்று கஞ்சா செய்கைக்கு சட்ட ரீதியான அனுமதிகளை வழங்கியுள்ளனர்.

64 ஏக்கர் கஞ்சா செய்கைக்காக சட்டபூர்வ ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் கைவிடப்பட்டுள்ளனர்.
தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்து விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
இறுதியில் அவர்களின் பயிர் அறுவடைகளுக்கு நியாயமான விலை கிடைத்தபாடில்லை.
அரசாங்கம் பெற்றுக் கொடுத்தபாடுமில்லை.
தற்சமயம் வெலிமடை, ஊவா பரணகம பகுதிகளில் உருளைக்கிழங்கு விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். என எதிர்க்கட்சித் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மொனராகலை மாவட்டத்தைச் சார்ந்த இம்முறை புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேர்தல் சமயத்தில், வலுச்சக்தி அமைச்சு சார் நடவடிக்கைகளில் இவற்றை இவ்வாறு செய்ய முடியும் அவ்வாறு செய்ய முடியும் என சொன்ன விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை அவ்வாறு செய்ய முடியாது என்று தற்போது தெரிவித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு வெட்கமே இல்லாமல் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
எரிபொருள் மீதான 50 ரூபாய் விசேட பெறுமதி சேர் வரியை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையைக் குறைப்பதாக இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் கூறியிருந்தனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 884 பில்லியன் டொலர்களை தற்போது கடனாக செலுத்த வேண்டி காணப்படுகிறது. ஆகையால் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு 50 ரூபாய் வரி விதிக்கிறோம் என்று விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலையில் எரிபொருளை மக்களுக்கு பெற்றுத் தருவோம் என்று தேர்தல் காலங்களில் ஆளும் தரப்பினர் பிரஸ்தாபித்தனர். ஆனால் தெளிவான அதிகாரத்தை வைத்துக் கொண்டும் அரசாங்கத்தால் இதுவரையில் எதனையுமே செய்ய முடியாதுபோயுள்ளது.
ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்தபோது, பிரேமதாச வெள்ளைக்கார பெண்களுக்கு உள்ளாடைகளை தைக்கிறார் என்று தற்போதைய ஆளும் தரப்பின் அப்போதைய தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இன்று, இந்த ஆளும் தரப்பினர் 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கஞ்சா செய்கையில் ஈடுபட சட்ட ரீதியான அனுமதிகளை வழங்கியுள்ளனர். அன்று ஆடைத் தொழில் உற்பத்தித் தொழிலாக மேம்படுத்தப்பட்டது.
இன்று 7 திட்டங்களின் கீழ் 64 ஏக்கர் கஞ்சா செய்கைக்காக சட்டபூர்வ ரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது விவசாயிகள் கைவிடப்பட்டுள்ளனர். தங்கள் சொத்துக்களை அடமானம் வைத்து விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர். இறுதியில் அவர்களின் பயிர் அறுவடைகளுக்கு நியாயமான விலை கிடைத்தபாடில்லை. அரசாங்கம் பெற்றுக் கொடுத்தபாடுமில்லை. தற்சமயம் வெலிமடை, ஊவா பரணகம பகுதிகளில் உருளைக்கிழங்கு விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அவர்களின் உற்பத்திகளுக்கு நிலையான விலைகள் கிடைத்தபாடில்லை. மொனராகலை பிரதேசத்தில் காணப்படும் பெல்வத்த செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு, சரிவைச் சந்தித்து வருகின்றன. இது தான் இந்த அரசாங்கத்தால் இந்நாட்டில் கொண்டு வரப்பட்ட முறைமை மாற்றம்.



