News

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினப் பேரணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி இன்று பிற்பகல் மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

குறித்த பேரணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தும் வகையில் திருட்டு, மோசடி, ஊழல் மற்றும் அச்சுறுத்தல்கள் நிரூபிக்கப்பட்ட ஒரு காலப்பகுதியாக கடந்த காலம் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி மோசடி மற்றும் திறைசேரியில் இடம்பெற்ற 25 இலட்சம் அமெரிக்க டொலர் கொள்ளை என்பன அண்மைய காலத்தில் இடம்பெற்ற பாரிய அளவிலான திருட்டுகளாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள “பொய் போதாதற்கு திருடர்கள்” என்ற வாசகம் தற்போதைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான கருப்பொருள் என்றும், இந்த வாசகத்தை அடிமட்ட மக்களிடம் கொண்டு செல்வீர்கள் என எதிர்பார்ப்பதாகவும் தனது செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வாசகத்தை பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக நடைமுறைப்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்றும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து பயணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறும் நினைவுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் தனது வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button