ஐக்கிய தேசியக் கட்சியின் “சிறிகொத்த” வைப் புனரமைக்க இலட்சக்கணக்கில் நாட்டு மக்களின் நிதியும் அரச ஊழியர்களும் பாவனை.. அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் அதிகாரி கைது

இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் ஒருவரும் இன்று (3) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் சுமதிபால மஹானாம அபேவிக்ரம இன்று காலை 9.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
அதேபோல, இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் சரத் சந்திர குணரத்ன ஜயதிலக்கவும் இன்று காலை 10.15 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான “சிறிகொத்த” வைப் புனரமைக்க அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களையும் வளங்களையும் பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகள் இன்று ஜயதிலக்கவை கைது செய்தனர்.
இலஞ்ச ஆணைக்குழுவின்படி, இந்த நடவடிக்கை கூட்டுத்தாபனத்திற்கு ரூபா 1,667,294.87 நிதி இழப்பையும், அரசியல் கட்சிக்கு நியாயமற்ற இலாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்தேக நபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



