BYD வாகனங்களை வாங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறி, கொழும்பு BYD வாகன விற்பனை நிலையம் முன்பாகஆர்பாட்டம்

BYD வாகனங்கள் சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குத் தீர்வு கோரி இன்று (04) கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கொழும்பில் அமைந்துள்ள BYD வாகன விற்பனை நிலையம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் முடிவால், BYD வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த வாகனங்களைச் சாதாரணமாக வாங்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கைச் சுங்கத் திணைக்களம் உட்படப் பொறுப்புள்ள தரப்பினர் உடனடியாகத் தலையிட்டு, இந்தப் பிரச்சினைக்குத் துரிதமாகத் தீர்வு காண வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கையாகும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட BYD வாகனங்களைத் தடுத்துவைத்துச் சுங்கத் திணைக்களம் சோதனை செய்தது.
இதற்கு, இதுவரை பின்பற்றப்பட்ட உத்தியோகபூர்வ நடைமுறைக்கு அமைய, வாகன உற்பத்தியாளரின் சான்றிதழை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுங்கத்துறை காரணம் கூறியுள்ளது.
BYD வாகனங்களைத் தடுத்து வைத்திருப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், JKCG Auto நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தற்போதுள்ள நிலைக்கு நியாயமான தீர்வு சுங்கத் திணைக்களத்தால் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



