டிட்வா புயல் காரணமாக தொடரும் மழை! வட சென்னை பகுதி மக்கள் பரிதவிப்பு!

டிட்வா புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், வடசென்னைப் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட சென்னை பகுதிகளான பெரம்பூர், வியாசர்பாடி, எம்.கே.பி. நகர், பேசின் பிரிட்ஜ், கொண்டிதோப்பு, காசிமேடு, திருவெற்றியூர் ஆகிய பல்வேறு பகுதியில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
இங்கு தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக தேங்கி நிற்கும் மழை தண்ணீரை அகற்றாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.
இன்று காலை சென்னை மேயர் பிரியா ,சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இங்கு வந்து பார்வையிட்டு சென்றார். ஆனாலும் சென்னை மாநகராட்சி பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மேலும் மழை நீர் தேங்கி நிற்பது மட்டுமல்லாமல், அதன் தொடர்ச்சியாக, மின் தடை அல்லது மின்சாரம் தாக்கும் பிரச்னை, கழிப்பறை பிரச்னை வீடுகளுக்குள் மழைநீர் வருவது போன்ற பிரச்னைகளையும் எதிர்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
வட தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு மழை தொடர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் பரவலாக மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது. தற்போது புயல் மிக மிக மெதுவாக 3 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது சென்னையில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 40 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று தெரிகிறது



