News

நஷ்டம் காரணமாக அன்று தனி­யா­ருக்கு விற்­பனை செய்யப்பட இருந்த மில்கோ நிறு­வ­னம் இன்று 2025ஆம் ஆண்டில் மிக உயர்ந்த விற்பனை வருவாயுடன் வரலாற்றில் அதிகப்படியான நிகர இலாபத்தைப் பதிவு செய்த நிறுவனமாக பதிவானது.

மாற்றத்திற்கான ஒரு யுகத்தை உருவாக்குவதற்காகப் பொருளாதாரச் செயல்பாட்டுக்குள் அனைவரையும் உள்வாங்கி, அதன் பலன்களை அனைவரும் அடையக்கூடிய ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என அரசாங்கம் நம்புவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (02) அலரி மாளிகையில் நடைபெற்ற ‘மில்கோ கிரிகோவி அபிமன்’ எனும் பால் உற்பத்தியாளர்களுக்கான விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும், அவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்குமான தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

‘பாலினால் செழிப்பான வளமான நாடு’ எனும் தொனிப்பொருளில் அமைந்த இந்த விழா, 2025ஆம் ஆண்டில் மிக உயர்ந்த விற்பனை வருவாயுடன் வரலாற்றில் அதிகப்படியான நிகர இலாபத்தைப் பதிவு செய்த மில்கோ நிறுவனத்தின் அந்த வெற்றிக்குத் தோள் கொடுத்த பால் உற்பத்தியாளர்களைக் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், மில்கோ நிறுவனத்துடன் இணைந்திருக்கும் சுமார் 22,000 பால் உற்பத்தியாளர்களுக்கு நிறுவனத்தின் லாபத்தின் ஒரு பகுதி கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. இன்றைய விழாவில் இரண்டாயிரம் பால் உற்பத்தியாளர்களுக்கு அடையாள ரீதியாக இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. அத்துடன் நாடெங்கிலும் உள்ள மில்கோ நிறுவன பால் உற்பத்தியாளர்களுக்குப் போனஸ் வழங்குதல் மற்றும் கள உத்தியோகத்தர்களைக் கௌரவித்தல் ஆகியனவும் இடம்பெற்றன.

அத்தோடு சமூக பாதுகாப்பு நிதியமும் மில்கோ நிறுவனமும் இணைந்து முன்னெடுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வூதிய அங்கத்துவச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

தற்போதைய அரசாங்கம் ‘பொருளாதார ஜனநாயகம்’ சார்ந்த பொருளாதார முறைமையைச் செயல்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும், உற்பத்திச் செயல்முறையில் நாட்டின் அனைத்து உற்பத்தியாளர்களையும் இணைத்துக்கொண்டு அதன் நன்மைகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வது பொருளாதாரத்தின் மிக முக்கிய அம்சமாகும்.

உள்நாட்டு நிறுவனங்களுக்குள் ஊழல் மற்றும் மோசடிகளைக் குறைத்து, முறையான முகாமைத்துவத்துடனும் இலக்கு மிக்க தலைமைத்துவத்துடனும் நிர்வகிப்பதன் மூலம், அவற்றை வலுவான மற்றும் மக்களுக்குப் பயனளிக்கும் நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பதை மிகக் குறுகிய காலத்திற்குள் மில்கோ நிறுவனம் நிரூபித்துள்ளது.

இந்த இலாபப்பங்கினை 21 வருடங்களுக்குப் பின்னரே எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கின்றது. இதற்கு முன்னர் 21 வருடங்களுக்கு முன்னதாக தற்போதைய ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த குறுகிய காலத்திலேயே இவ்வாறானதொரு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மீண்டும் அந்த நிலைக்கு வருவதற்கு 21 வருடங்கள் கடந்துள்ளன. இதிலிருந்து கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த நாட்டிற்கு எவ்வளவு பெரிய பொய்யைக் கூறினார்கள் என்பது தெளிவாகிறது.

எம்மால் 15 அல்லது 16 மாதங்களில் இவ்வாறானதொரு சாதனையை அடைய முடிந்தது என்றால், இத்தனை ஆண்டுகளாக இந்த நிறுவனங்களைப் பொறுப்பேற்றிருந்தவர்கள் செய்த மோசடி எத்தகையது என்பது நன்கு புலப்படுகின்றது. அவற்றைச் சரிசெய்து, பொருளாதாரச் செயல்பாட்டில் அனைவரையும் இணைத்து, அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய மற்றும் நிறுவனங்களைச் சரியாகக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு காலம் தற்போது உதயமாகியுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கிய மில்கோ நிறுவனத்தைக் குறுகிய காலத்திற்குள் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைத்த தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை மற்றும் ஊழியர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்ததுடன், இவ்வாறான சாதனைகளுக்குத் தேசிய முக்கியத்துவம் வழங்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன, அதிகாரிகள் மற்றும் நாடெங்கிலுமிருந்து வருகை தந்திருந்த பால் உற்பத்தியாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button