நீதிமன்ற உத்தரவால் ஆத்திரமடைந்த பெண், நீதிமன்ற வளாகத்திலேயே பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய சம்பவம் வடக்கில் பதிவு

பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் பாதுகாப்பிலிருந்த எட்டு வயது குழந்தையை, அவரது கணவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நீதிமன்றக் கட்டளையினால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரைத் தனது பாதணியால் தாக்கி மோதுதலில் ஈடுபட்டுள்ளார்.
காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 36 வயதுடைய பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



