சுமார் ஏழரை இலட்சம் போதை மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு பேர் கைது.

பெப்ரவரி 2ஆம் திகதி வத்தளையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 744,500 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைப்பிரிவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மேற்கு கடற்படை கட்டளைப்பிரிவின் எஸ்.எல்.என்.எஸ். ரங்கல மற்றும் கெமுனு ஆகிய கடற்படைப் பிரிவினர், வத்தளை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, இந்த போதை மாத்திரைகளுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றையும் கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 32 வயதுடைய கல்பிட்டி மற்றும் கொபேகன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக போதை மாத்திரைகளுடன் வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



