News

முடியும் என்றால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்;  அரசாங்கத்திற்கு சவால் விடுத்த நாமல் ராஜபக்ச – மகா சங்கத்தினரை அரசு அவமதிப்பதாகவும் , திருகோணமலையில் புத்தர் சிலையைப் பாதுகாப்பது தொடர்பான விடயத்தில் பெளத்த பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப் பட்டதாகவும் மேலும் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, எந்தவொரு தேர்தலையும் எந்த நேரத்திலும் எதிர்கொள்ள எதிர்க்கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதன் மூலமும், மகா சங்கத்தினரை ஓரங்கட்டுவதன் மூலமும், நாட்டின் கலாசாரத்தை சீர்குலைப்பதன் மூலமும் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுக்கு ஏற்றவாறு கொள்கை முடிவுகளை எடுப்பதன் மூலமும் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று அரசாங்கம் நம்புவது தவறு என ராஜபக்ச கூறினார்.

“அரசாங்கத்திற்கு நம்பிக்கை இருந்தால், சாக்குப்போக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தியது போன்று மகாண சபைத் தேர்தலையும் நடத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் தமது ஆணையைத் தெளிவாக வெளிப்படுத்தவும், அரசாங்கம் உண்மையாக எங்கே நிற்கிறது என்பதைப் பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எந்தவொரு தேர்தலையும் சந்திக்க பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும், மக்கள் வாக்குச்சீட்டின் மூலம் தீர்மானிப்பதற்கு இடமளிக்காமல் அரசாங்கம் அரசியல் சொல்லாடல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

முந்தைய அரசாங்கங்களுடன் தொடர்புடைய விசாரணைகளை அரசாங்கம் கையாளும் விதம் குறித்து விமர்சித்த ராஜபக்ச, கடந்த ‘நல்லாட்சி’ காலத்தில் கோப்புகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாகவும், அதற்குப் பொறுப்பானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரினார்.

அரசியல் லாபத்திற்காக முன்வைக்கப்படும் போலிக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸார் உட்பட அரச நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியதுடன், சில அதிகாரிகள் அரசியல் நலன்களுக்காக பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மத விவகாரங்கள் குறித்து கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, மகா சங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்களை அரசாங்கம் அவமதிப்பதாகக் குற்றம் சாட்டினார். திருகோணமலையில் புத்தர் சிலையைப் பாதுகாப்பது தொடர்பான அண்மைக்கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உறுதிமொழிகளுக்கு மத்தியிலும் பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதை நினைவூட்டினார்.

நாட்டின் இளைஞர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டதாகவும், கடந்த தேர்தலுக்கு முன்னர் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இளைஞர்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்வதற்கும், கட்சியின் எதிர்கால அரசியல் திசையை வலுப்படுத்துவதற்கும் ‘தாமரை இயக்கம்’ (Lotus Movement) என்ற தனது இளைஞர் தளத்தின் ஊடாக பொதுஜன பெரமுன இளைஞர்களுடன் இணைந்து செயற்படுவதாக ராஜபக்ச கூறினார்.

“இந்த அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதை இந்த நாட்டு மக்கள் – இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் – இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். அந்தப் பொய்கள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும்போது, அரசாங்கம் புகார்கள் மற்றும் சாக்குப்போக்குகளுடன் பதிலளிக்கிறது,” என்று அவர் கூறினார்.

தேர்தலுக்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்திய ராஜபக்ச, எதிர்க்கட்சிகள் எந்தவொரு கேள்விக்கும் அல்லது ஆய்வுக்கும் அஞ்சவில்லை என்றும், ஜனநாயக செயல்முறையூடாக எந்த நேரத்திலும் மக்களைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button