News

இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம்  மக்கள் எவ்வித இனவாதமுமின்றி சகோதரத்துவத்துடனேயே வாழ்கின்ற நிலையில், இந்த அரசாங்கம் அரசியல் நோக்கத்திற்காக இனவாதத்தை பேசி மக்களை பிரிக்கிறது ; பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு

பத்தரமுல்லவில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.



நாட்டின் சட்டத்தரணிகளுக்குப் போதிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ள நிலையில், நேற்றைய தினம் சட்டத்தரணிகள் தமது பணிகளில் இருந்து விலகி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு சந்தேக நபர் குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிக்க அவர்களுக்கு சட்ட உதவி அவசியம் என்றும், ஆனால் தற்போதைய அரசாங்கம் குற்றவாளிகளுக்காகத் தோன்றும் சட்டத்தரணிகளையும் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் ஒரு நிலையை உருவாக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.



நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலைச் சம்பவங்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கம் குறித்துப் பேசிய அவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தனது பொறுப்பில் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு கொலைச் சம்பவத்தின் போதும் அது பாதாள உலகக் குழுக்களுக்கிடையிலான மோதல் என அரசாங்கம் கூறித் தப்பிக்கப் பார்ப்பதாகச் சாடிய அவர், இவ்வாறான மோதல்களைத் தடுப்பதற்குப் புலனாய்வுப் பிரிவினர் என்ன செய்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.



குறிப்பாகப் பாதுகாப்பு வலயங்களுக்குள்ளேயே இவ்வாறான கொலைகள் இடம்பெறுவது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.



யுத்தம் தொடர்பாகப் பிரதமர் அண்மையில் மன்னாரில் வெளியிட்ட கருத்துக்களுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்த இந்திக அனுருத்த, பிரதமருக்கு யுத்தம் எப்போது முடிவடைந்தது என்ற திகதி கூடச் சரியாகத் தெரியாது எனக் குறிப்பிட்டார்.



ஒருமுறை அவர் 2011 ஆம் ஆண்டிலேயே யுத்தம் முடிந்ததாகக் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தெற்கு மக்கள் இனவாதத்தைத் தூண்டுவதற்காகவே யுத்தம் செய்ததாகப் பிரதமர் கூறுவது தவறான கருத்து எனத் தெரிவித்தார். உண்மையில் இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பர்கர் இன மக்கள் எவ்வித இனவாதமுமின்றிச் சகோதரத்துவத்துடனேயே வாழ்கின்றனர் என்றும், அரசாங்கம் தனது அரசியல் தோல்விகளை மறைக்கவே மீண்டும் இனவாதத்தைப் பேசி மக்களைப் பிரிக்க முயல்வதாகவும் அவர் சாடினார்.



அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து ஒன்றரை வருடங்கள் நெருங்கும் நிலையிலும், மக்களின் பாதுகாப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டுக்கு உண்மையான அமைதியைப் பெற்றுக்கொடுத்தார் என்றும், ஆனால் இன்று பொதுமக்கள் வீதிகளில் பாதுகாப்பின்றி அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.



எனவே, செயல்திறன் அற்ற அமைச்சர்களை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, தகுதியானவர்களைக் கொண்டு நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடுத்தார்.



ச. ஞான பிரசாந்தன்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button