இந்த நாட்டில் இனவாதம் உள்ளதாக அரசாங்கம் பகிரங்கமாகக் கூறுவதால் இந்நாட்டின் பெயர் கெடுகிறது ; தெரன திலீத் ஜெயவீர குற்றம் சாட்டுகிறார்

இலங்கை ஓர் இனவாத நாடு என இந்த அரசாங்கமே பகிரங்கமாகக் கூறி நாட்டின் பெயரை சீரழிப்பதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும்எம்.பியுமான திலித் ஜயவீர குற்றஞ்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று (17) இடம்பெற்ற பாராளுமன்ற ஓய்வூதிய (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘‘இந்த நாட்டில் இனவாதம் உள்ளது. அந்த இனவாதத்தை ஒழிக்க வேண்டுமென இந்த அரசாங்கம் பகிரங்கமாக கூறி வருகின்றது. இந்த நாட்டில் இனவாதம் இருக்கின்றது என்றால் யார் அந்த இனவாதிகள்? அவ்வாறு நாட்டில் இனவாதம் இல்லை. இவ்வாறு அரசாங்கம் கூறுவதன்மூலம் சுற்றுலாத்துறை மோசமான விளைவுகளை சந்திக்கும்.
எனவே இலங்கையில் இனவாதம் உள்ளது எனக் கூறுவதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.கடந்த 13ஆம் திகதி தலங்கம, அக்குரேகொட பகுதியில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அந்த சட்டத்தரணியை பாதாளக் குழுக்களுக்காக ஆஜராகின்றவர் என அரசாங்கமும் பொலிஸாரும் கூறுகின்றனர்.
ஆதாரங்களின்றி உடனடியாக இவ்வாறு கூற முடியாது. எனவே அந்தக்கூற்றை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.இதேவேளை, ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 72 பேர் இருக்கிறார்கள். அவர்களின் சம்பளம் கட்சி நிதியத்துக்கே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவர்களில் அதிகமானவர்கள் தங்கள் மனச்சாட்சியின்படி அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு தற்போது பாராளுமன்ற ஓய்வூதியம் மாத்திரமே கிடைக்கிறது. அதனால் அவர்களை பழிவாங்கும் நோக்கிலே தற்போது அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதாக இருந்தால், இதனையும் விட முக்கியமான பல வாக்குறுதிகள் இருக்கின்றன. அவை எதனையும் செய்ய முற்படாமல் இந்த விடயத்தை கையில் எடுத்திருப்பதன் நோக்கம், பழிவாங்கும் நோக்கமே தவிர, மக்களின் பணத்தை மீதப்படுத்துவதற்கு அல்ல.
அரசாங்கம் தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களது ஓய்வூதியத்தை நீக்குவதன் மூலம் எதிர்காலத்தில் மோசடிகள் அதிகரிக்கலாம். ஏனெனில், தற்போதுள்ள உறுப்பினர்கள், ஒரு காலத்தில் ஓய்வுபெறும்போது அவர்களுக்கு மருந்துக்குக் கூட பண வசதி இல்லாமல் போகலாம். அதனால் அவர்கள் தற்போது மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கட்சி நிதியத்துக்கு பணத்தை சேகரித்து, பிற்காலத்தில் அதன் மூலம் தங்களுக்கு தேவையான செலவுகளை பார்த்துக்கொள்ளலாம் என நினைப்பார்கள்.
அதன் பிரகாரமே தற்போது நிலக்கரி மோசடி, கொள்கலன் மோசடிகள் இடம்பெற்றுள்ளனஇது மிகவும் பிழையான முன்மாதிரியாகும். இவர்களைப்போன்று ஏனைய கட்சிகளும் கட்சி நிதியம் ஒன்றை அமைத்தால், எதிர்காலத்தில் நாட்டில் ஜனநாயகம் இல்லாமல்போகும். கட்சி உறுப்பினர்கள் மனச்சாட்சியின் பிரகாரம், செயற்பட முடியாமல் அனைவரும் அடிமைகள் நிலைக்கு செல்வார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறைக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அதில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதனை செய்யலாம். அவ்வாறு இல்லாமல் முற்றாக நீக்குவது முறையல்ல. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயக முறைமைக்கு பாரிய சவால்’’ என்றார்.



