News

மத்திய கிழக்கில் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விரைவில் அமைதியான சூழ்நிலைக்கு வர வேண்டுமென ஜனாதிபதி கோரிக்கை

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விரைவில் அமைதியான சூழ்நிலைக்கு வர வேண்டுமென இலங்கை எதிர்பார்க்கின்றது. ஏனெனில் இது இலங்கை உட்பட முழு உலகின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறதென்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.



இன்று (03) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,



எந்தவொரு போர் மோதலும் எந்தவொரு மக்கள் குழுவிற்கும் சாதகமான நிலையை உருவாக்காது. தொழில்நுட்ப ரீதியாகவும், போர் ரீதியாகவும் பாரிய ஆயுதத் தொழில்நுட்பக் கருவிகள் உருவாக்கப்பட்டு வரும் உலகில் இது எவ்வளவு அழிவுகரமானது என்பது குறித்து நாம் அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.



எனவே, இலங்கையின் நிலைப்பாடு என்னவென்றால், இந்தப் போருடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்புகளையும் வழிகாட்டல்களையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என்பதாகும்



அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ச்சியாக இந்நிலைமையை அவதானித்து வருவதாகவும், இலங்கை மத்திய வங்கி தற்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்து, நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை நாளை (04) வெளியிடுமென தெரிவித்துள்ளார்.



அத்துடன், ஒட்டுமொத்த நெருக்கடிக்கான தீர்வும் தனிநபர்களின் கைகளில் இல்லை. ஒட்டுமொத்த நெருக்கடிக்கான தீர்வுப் பாதையைக் கண்டறிவதில் அரசாங்கத்திற்கே பிரதான பொறுப்பு உள்ளது.



அதேநேரம், பாராளுமன்றத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாத பொறுப்பு உள்ளது. பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க பொறுப்பு உள்ளது. அரசாங்கம், பாராளுமன்றத்திலுள்ள நாம் அனைவரும் மற்றும் மக்கள் என யாவரும் ஒரு பொதுவான இலக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் இதனை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எமது முன்மொழிவாகும். என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button