பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 729 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம்

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 729 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் (Remittances) இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நாட்டுக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் அளவு 548.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமானது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 180.9 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2026 ஜனவரி மாதத்தில் 751.1 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் நாட்டுக்குக் கிடைத்திருந்ததுடன், பெப்ரவரி மாதத்தில் அதில் சிறிய அளவிலான வீழ்ச்சி காணப்படுகிறது.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள மொத்தப் பணப்பரிமாற்றத்தின் அளவு 1.48 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 32 சதவீத அதிகரிப்பு எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



