உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலைகள் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்த விலையை விட குறைவாகவே உள்ளது ; பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர

உலகளாவிய ரீதியில் எண்ணெய் விலைகள் தற்போது அதிகரித்து வருகின்ற போதிலும், இலங்கையில் எரிபொருள் விலைகள் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பதிவான மட்டங்களை விட குறைவாகவே காணப்படுவதாக பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து விடுத்துள்ள அறிக்கையில், 2024 மார்ச் மாதத்தில் உலகளாவிய சூழல் ஒப்பீட்டளவில் சீராக இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 85 அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றர் 371 ரூபாவாகவும், டீசல் 363 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 262 ரூபாவாகவும் காணப்பட்டதாக பிரதி அமைச்சர் கூறினார்.
தற்போதைய உலகளாவிய சூழ்நிலை மிகவும் சவாலானது எனக் குறிப்பிட்ட அவர், தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் முக்கிய எரிசக்தி விநியோக வழிகளைப் பாதித்துள்ளதுடன், கச்சா எண்ணெய் விலையை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளன என்றார்.
இந்த நிலைமைகளுக்கு மத்தியிலும், 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் காணப்பட்டதை விட உள்நாட்டு எரிபொருள் விலைகளை குறைவாக பேண இலங்கை முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலகளாவிய எரிசக்தி ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அழுத்தங்களை அரசாங்கம் புரிந்துகொண்டுள்ளதாகவும், நாட்டின் எரிசக்தி விநியோகத்தில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் அதேவேளையில் நிலைமையை கவனமாக கையாளுவதைத் தொடரும் என்றும் ஹேமச்சந்திர மேலும் கூறினார்.


