முன்பு இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது… ஆனால் இப்போது இந்தியா உட்பட உலக நாடுகளை ரஷ்யாவிடம் எண்ணெய்யை வாங்குமாறு அமெரிக்கா கெஞ்சுகிறது

ரஷ்யாவின் எண்ணெய் விஷயத்தில் அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. முன்பு இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. ஆனால் இப்போது இந்தியா உட்பட உலக நாடுகளை ரஷ்யாவிடம் மசகு எண்ணெய்யை வாங்க அமெரிக்கா வலியுறுத்துகிறது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியாவை மிரட்டுவதில் அமெரிக்கா பல மாதங்கள் செலவிட்டது. தற்போது ஈரானுடனான இரண்டு வாரப் போருக்குப் பிறகு, வெள்ளை மாளிகை இந்தியா உட்பட உலக நாடுகளிடம் ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்கக் கெஞ்சுகிறது. ஈரான் மீதான போரை ஆதரிப்பதால், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று ஐரோப்பா நினைத்தது பரிதாபகரமானது” என்றார்.
மசகு எண்ணெய் விலை உயர்ந்து வருவது ரஷ்யாவிற்கு பெரும் வருவாய் ஊக்கத்தை அளிப்பதாக ஒரு பத்திரிகை வெளியிட்ட தலைப்புச் செய்தியை பகிர்ந்த ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்தக் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை ட்ரம்ப் நிர்வாகம் கடலில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய மசகு எண்ணெய்யை வாங்க நாடுகளை அனுமதிக்கும் வகையில் 30 நாள் விலக்கு அறிவித்திருந்தார். மத்திய கிழக்கில் போருக்கு மத்தியில், மிக முக்கியமான எண்ணெய் கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதன் காரணமாக, மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டிய பின்னர், அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்தது.



