அமெரிக்கா, ஹார்முஸ் நீரிணையை முடக்கினால், ஈரானின் கோபம் அதிகரித்து உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைகள் சீர்குலைக்கப்பட வாய்ப்புள்ளது என தெரிவித்து இதனை இராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் கையாளுமாறு சவுதி அரேபியா, அமெரிக்காவை வலியுறுத்தியது

சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முடக்கியுள்ள நடவடிக்கையானது ஈரானின் மேலதிக ஆத்திரமூட்டல்களைத் தூண்டி, உலகளாவிய கப்பல் போக்குவரத்துப் பாதைகளை சீர்குலைக்கக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சவுதி அரேபியா அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
டொனால்ட் ட்ரம்பினால் உத்தரவிடப்பட்ட இந்த முடக்கமானது, உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதிக்கு முக்கியமான செங்கடலில் உள்ள பாப் அல்-மண்டேப் ஜலசந்தி உள்ளிட்ட பிற மூலோபாய கடல் வழித்தடங்களை இலக்கு வைப்பதற்கு ஈரானைத் தூண்டக்கூடும் என்று சவுதி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமரிக்க – ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுடன் தொடர்புடைய கப்பல் போக்குவரத்தைச் சுற்றி அமெரிக்கா கடற்படைத் தடையை விதித்த பின்னர் இந்தக் கவலை எழுந்துள்ளது.
இந்த நடவடிக்கை கடல்சார் நடவடிக்கைகளை உடனடியாக சீர்குலைத்ததுடன், சில கப்பல்கள் தமது பாதைகளை மாற்றியமைத்ததோடு, உலகளாவிய எண்ணெய் விலையும் ஒரு பீப்பாய்க்கு 100 டாலருக்கு மேல் உயர்ந்தது.
மத்திய கிழக்கில் வாஷிங்டனின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா, ஈரான் தனது தாக்குதல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு அப்பால் விரிவுபடுத்துவதன் மூலம் பதிலடி கொடுக்கக்கூடும் என்றும், இது செங்கடல் கப்பல் பாதைகளையும் பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் பாதிக்கக்கூடும் என்றும் அஞ்சுகிறது.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 20% ஹார்முஸ் ஜலசந்தி ஊடாகவே நடைபெறுவதால், இது உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
எனவே, இங்கு ஏற்படும் நீண்டகாலத் தடங்கல் உலகளாவிய சந்தைகளிலும் எரிசக்தி விநியோகத்திலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்.
அணுசக்தி நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான முக்கிய நிபந்தனைகளுக்கு தெஹ்ரான் ஒப்புக்கொள்ளும் வரை அழுத்தம் தொடரும் என வாஷிங்டன் எச்சரித்துள்ள நிலையில், உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தவிர்ப்பதற்காக, முடக்கத்தைத் தளர்த்தி மீண்டும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு சவுதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.



