சவூதி சல்மான் (MBS) எனது காலடியில் விழுவார் (kissing my a**) என்று அவர் நினைக்கவே இல்லை என முகமது பின் சல்மான் குறித்துக் கடினமான வார்த்தைகளால் பேசிய டொனால்ட் ட்ரம்ப்

அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்துக் கடினமான வார்த்தைகளால் பேசியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் மேற்கு ஆசியப் பிராந்தியத்தை உலுக்கி வருவதுடன், உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
சவுதி ஆதரவுடன் நடைபெற்ற முதலீட்டு மன்றம் ஒன்றில் உரையாற்றிய அவர், “இது நடக்கும் என்று அவர் நினைக்கவில்லை. அவர் எனது காலடியில் விழுவார் என்று அவர் நினைக்கவே இல்லை. உண்மையில் அவர் அவ்வாறு நினைக்கவில்லை” என்று கூறினார்.
சவுதி பட்டத்து இளவரசரை மேலும் அவமதிக்கும் வகையில் பேசிய ட்ரம்ப், “முகமது பின் சல்மான், நான் (ட்ரம்ப்) ஒரு தோல்வியுற்ற அமெரிக்க அதிபராக இருப்பேன் என்றும், அவரது நாடு வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் என்றும் நினைத்தார். ஆனால் இப்போது அவர் என்னிடம் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். என்னிடம் நல்லபடியாக இருக்குமாறு அவரிடம் சொல்லுங்கள். அவர் அவ்வாறுதான் இருக்க வேண்டும்” என்று கூறினார்.
சவுதி அரேபியாவின் நடைமுறைத் தலைவரைப் பற்றி ட்ரம்ப் முன்னர் கூறியிருந்த கருத்துக்களில் இருந்து இந்த அண்மைக்காலக் கருத்துக்கள் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளன.
புதன்கிழமை அன்று, சவுதி பட்டத்து இளவரசர் ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகக் கூறிய ட்ரம்ப், அவரை அமெரிக்காவுடன் இணைந்து போராடும் “ஒரு போர்வீரன்” என்று அழைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “அவர் செய்கிறார் — அவர் ஒரு போர்வீரன். அவர் எங்களுடன் இணைந்து போராடுகிறார்” என்றார்.
தற்போதைய அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் பிராந்தியத்தை மறுசீரமைப்பதற்கான ஒரு “வரலாற்று வாய்ப்பு” என்று சவுதி பட்டத்து இளவரசர் கருதுவதாகவும், ஈரானுக்கு எதிரான மோதலைத் தொடருமாறு அவர் ட்ரம்பை வலியுறுத்தியதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
ஈரானின் மதத் தலைமைத்துவத்தை வீழ்த்துவதற்காக இடைவிடாத போராட்டத்தை முன்னெடுக்குமாறு பட்டத்து இளவரசர் சமீபத்தில் பரிந்துரைத்ததை அந்த அறிக்கை விவரிக்கிறது. ஈரான் ஒரு நிரந்தர பிராந்திய அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மொத்த ஆட்சி மாற்றத்தின் மூலம் மட்டுமே அதனை நடுநிலையாக்க முடியும் என்றும் முகமது பின் சல்மான் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்ததாக இந்த நிலவரத்தை அறிந்த வட்டாரங்கள் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளன.
பட்டத்து இளவரசர் ஒரு முழு அளவிலான போரைத் தவிர்க்க விரும்புவதாகத் தெரிந்தாலும், அமெரிக்கா முன்கூட்டியே வெளியேறுவதே அவரது முதன்மையான அச்சமாக இருப்பதாக மூலோபாய வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்கா வெளியேறினால், சவுதி அரேபியா மற்றும் அதன் அண்டை நாடுகள் மேற்கத்திய ஆதரவின்றி “துணிச்சலான மற்றும் ஆவேசமான” ஈரானை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் கவலைப்படுவதாகக் கூறப்படுகிறது.



