News

அமெரிக்க மக்களே இஸ்ரேல் இப்போது கடைசி அமெரிக்க சிப்பாய் மற்றும் கடைசி அமெரிக்க வரி செலுத்துவோரின் டாலர் வரை ஈரானுடன் போரிட இலக்கு வைத்துள்ளது என அமெரிக்க மக்களுக்கு தெளிவூட்டல் கடிதம் ஒன்றை வெளியிட்டார் ஈரான் ஜனாதிபதி

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், ஈரான் மற்றும் உலகளாவிய விவகாரங்களில் அதன் பங்கு குறித்த “திரிபுகள் மற்றும் புனையப்பட்ட கதைகளுக்கு” அப்பாற்பட்டு சிந்திக்குமாறு அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்தச் செய்தியில், உலகின் பழமையான நாகரிகங்களில் ஒன்றாக ஈரானின் நீண்டகால வரலாற்றை பெசெஷ்கியான் வலியுறுத்தினார். படையெடுப்புகள், தடைகள் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளை எதிர்கொண்ட போதிலும், நவீன காலத்தில் ஈரான் ஒருபோதும் போரைத் தொடங்கியதில்லை என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்தார். ஈரானியர்கள் அரசாங்கங்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்கிறார்கள் என்றும், அமெரிக்கர்கள் மீது தங்களுக்குப் பகை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


ஈரானைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவ இருப்பை விமர்சித்த அந்தக் கடிதம், 1953-இல் வாஷிங்டன் ஆதரவுடன் நடந்த ஆட்சி கவிழ்ப்பு, 1980-களின் போரின் போது சதாம் ஹுசைனுக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் தொடர்ச்சியான தடைகளை நினைவு கூர்ந்தது. இத்தகைய அழுத்தங்கள் ஈரானை பலவீனப்படுத்தவில்லை என்று வாதிட்ட பெசெஷ்கியான், மாறாக எழுத்தறிவு, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் அடைந்துள்ள முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டினார்.


சமீபத்திய பதற்றங்கள் குறித்துப் பேசிய அவர், ஈரான் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தது, ஒரு உடன்பாட்டை எட்டியது மற்றும் அதன் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றியது என்று கூறினார்.


மேலும், அந்த உடன்படிக்கையிலிருந்து விலகும் முடிவு, மோதலை நோக்கி நகர்ந்தமை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் இரண்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தமை போன்றவை அமெரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அழிவுகரமான தேர்வுகள் என்றும், அந்தத் தேர்வுகள் ஒரு வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளரின் மாயைகளுக்குச் சாதகமாக அமைந்தன என்றும் ஈரானிய ஜனாதிபதி விளக்கினார்.


“எரிசக்தி மற்றும் தொழில்துறை வசதிகள் உள்ளிட்ட ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளைத் தாக்குவது நேரடியாக ஈரானிய மக்களை இலக்கு வைக்கிறது. இது ஒரு போர்க்குற்றம் என்பதையும் தாண்டி, இத்தகைய நடவடிக்கைகள் ஈரானின் எல்லைகளுக்கு அப்பால் நீடிக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளன. அவை உறுதியற்ற தன்மையை உருவாக்குகின்றன, மனித மற்றும் பொருளாதாரச் செலவுகளை அதிகரிக்கின்றன, மேலும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து நீடிக்கச் செய்து, பல ஆண்டுகளாக நிலைத்திருக்கக்கூடிய கசப்பான விதைகளை விதைக்கின்றன. இது வலிமையின் வெளிப்பாடு அல்ல; இது ஒரு மூலோபாயக் குழப்பம் மற்றும் நிலையான தீர்வைக் காண்பதற்கான இயலாமையின் அறிகுறியாகும்,” என்று ஈரானின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து அவர் கூறினார்.


மேலும், பாலஸ்தீனியர்கள் மீதான தனது நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப, ஒரு ஈரானிய அச்சுறுத்தலைப் புனைவதன் மூலம் இஸ்ரேல் அமெரிக்கக் கொள்கையில் செல்வாக்கு செலுத்துவதாக பெசெஷ்கியான் குற்றம் சாட்டினார்.


“அந்த ஆட்சியால் தூண்டப்பட்டு கையாளப்படும் இஸ்ரேலின் பதிலியாக அமெரிக்கா இந்த ஆக்கிரமிப்பில் நுழையவில்லையா? இஸ்ரேல், ஈரானிய அச்சுறுத்தலைப் புனைவதன் மூலம், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தனது குற்றங்களிலிருந்து உலகளாவிய கவனத்தைத் திசைதிருப்ப முயலவில்லையா? இஸ்ரேல் இப்போது கடைசி அமெரிக்க சிப்பாய் மற்றும் கடைசி அமெரிக்க வரி செலுத்துவோர் டாலர் வரை ஈரானுடன் போரிட இலக்கு வைப்பதும், அதன் மாயைகளின் சுமையை ஈரான், பிராந்தியம் மற்றும் அமெரிக்கா மீதே சுமத்தி சட்டவிரோத நலன்களைப் பின்தொடர்வதும் தெளிவாகத் தெரியவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.


பகையை விட ஈடுபாட்டைக் கருத்தில் கொள்ளுமாறு அமெரிக்கர்களை வலியுறுத்தி அவர் தனது உரையை நிறைவு செய்தார். மோதல் என்பது “விலை உயர்ந்தது மற்றும் பயனற்றது” என்றும், எடுக்கும் இந்தத் தேர்வு தலைமுறைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button