நாட்டில் ஐம்பத்திரண்டு சதவீதமாக உள்ள பெண்களுக்காக பேசுகிறேன் – துன்புறுத்தல்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாகிய பாராளுமன்ற பெண் உத்தியோகத்தருக்கு நீதி வேண்டும்

நாடாளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவர் பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் இம்சைகளுக்கும் உள்ளாகியுள்ளதாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழு தெளிவாகக் கண்டறிந்துள்ள போதிலும், அந்தக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவருக்கு உடனடியாக நீதியை வழங்குமாறு நாடாளுமன்ற நிர்வாகத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச மேலும் கூறியதாவது:
முக்கியமாக இந்த நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழுவே விசாரணைகளை நடத்தி பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் கடுமையான வாய்மொழி ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அந்த அறிக்கையின் பரிந்துரைகள் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தயவுசெய்து அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துங்கள். துன்புறுத்தலுக்குள்ளான அந்தப் பெண்ணுக்கும் ஏனைய பெண்களுக்கும் இனிமேலும் இவ்வாறான துன்புறுத்தல்கள் ஏற்படாத வகையில் செயற்படுங்கள். நாம் இங்கு பேசுவது மக்கள் தொகையில் ஐம்பத்திரண்டு சதவீதமாக இருக்கும் பெண்களுக்காகவாகும். அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமையாகும்.



