ஒரு பெரல் கச்சா எண்ணெய்யை 286 டொலருக்கு கொள்வனவு செய்தாக கூறுவது முற்றிலும் பொய்யானது: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

இலங்கை ஒரு பேரல் கச்சா எண்ணெய்க்கு 286 அமெரிக்க டொலர் என்ற அதிக விலையைச் செலுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள் காட்டி வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கை கச்சா எண்ணெய் கூட்டுத்தாபனம் (CEYPETCO) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற முதலீட்டு மாநாடொன்றில் HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் எல்ஹெட்ரி (George Elhedery) தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு, மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக காப்புறுதி மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு இவ்வாறான பாரிய செலவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது குறித்து சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விளக்குகையில்:
சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் ஒரே நிறுவனம் தாமே என்று கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட அல்லது இனிமேல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள எந்தவொரு கச்சா எண்ணெய் தொகுதிக்கும் ஒரு பேரலுக்கு 286 டொலர் செலுத்தப்படவில்லை எனவும், அவ்வாறான தொகையை செலுத்த ஒப்புக்கொள்ளவில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளபடி, மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்குப் பிறகு இலங்கைக்கு வரவுள்ள கச்சா எண்ணெய் கப்பல்களுக்காகச் செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்ட விலைகள் முறையே 71.99, 111.62, 71.81, 113.29 டொலர்கள் ஆகும். இந்த விலைகள் தற்போதைய உலக சந்தை விலைச் சுட்டிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சாதகமான நிலையில் உள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்குப் பின்னர் இலங்கையை வந்தடையும் முதலாவது கச்சா எண்ணெய் கப்பல் ஏப்ரல் 17 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.
கூட்டுத்தாபனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கும் வகையிலும் இவ்வாறான தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கச்சா எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.



