ராஜபக்சேக்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற யோசிப்பதை விட, கடந்த காலங்களில் சொத்துக்களைச் சூறையாடியமை மற்றும் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளுக்குச் சட்டத்தின் முன் எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம் என்பதையே யோசிக்க வேண்டும் ; அரசு தரப்பில் இருந்து பதில்

பொருளாதாரத்தைச் சீரழித்த ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப்போவதாகச் சூளுரைக்கின்றமை வேடிக்கையானது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வின் பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச “பொருளாதாரச் சுமையால் மக்களிடம் புத்தாண்டு உற்சாகம் இம்முறை இல்லை. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப் பாரிய திட்டத்துடன் களம் இறங்குவோம் என்று குறிப்பிட்டிருந்தார்
இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் குறித்து மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டிருப்பது வேடிக்கையானது. நாட்டைத் வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியவர்களே ராஜபக்சக்கள்தான்.
பொருளாதாரச் சுமை குறித்துப் பேசுவதற்கு அவர்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. பாரிய திட்டத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் எனக் கூறுவது பகற்கனவு காண்பதற்குச் சமனாகும். மக்கள் அவர்களை ஏற்கனவே நிராகரித்துவிட்டார்கள்.
இப்போது அவர்கள் கவலைப்பட வேண்டியது மீண்டும் அதிகாரத்துக்கு வருவது பற்றி அல்ல, கடந்த காலங்களில் மக்கள் சொத்துக்களைச் சூறையாடியமை மற்றும் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடிகளுக்குச் சட்டத்தின் முன் எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம் என்பது குறித்துத்தான் என்றார்.
புதிய ஆண்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் என மகிந்த ராஜபக்ச கூறியிருப்பதை வழிமொழிந்த அமைச்சர், “நிச்சயமாக அரசியல் மாற்றம் ஏற்படும்.
ஆனால் அது அவர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக அல்ல மாறாக, அவர்கள் உருவாக்கிய ஊழல் கலாசாரத்தை முற்றாக ஒழித்து, முறையான ஜனநாயகத்தை நிலைநாட்டவே அந்த மாற்றம் அமையும்.
ராஜபக்சக்களின் அரசியல் சகாப்தம் இலங்கையில் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர வேண்டும்” என்றார்.

