திறைசேரி கொள்ளை சைபர் தாக்குதல் என்பதை விட கவனக்குறைவின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது ; ஹர்ஷ

திறைசேரி நிதி மோசடியை விமர்சித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்தச் சம்பவம் ஒரு அதிநவீன சைபர் தாக்குதலை விட அடிப்படை கவனக்குறைவின் விளைவாகவே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், சாதாரண கொடுக்கல் வாங்கல்கள் கூட பெரிய தொகைகள் மாற்றப்படுவதற்கு முன்னர் பொதுவாக சரிபார்க்கப்படும் நிலையில், நிலையான நிதிக்கட்டுப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிகிறது என்றார்.
மில்லியன் கணக்கிலான பணம் அனுப்பப்படுவதற்கு முன்னர், இலக்கு வங்கிக் கணக்கை உறுதிப்படுத்த ஏன் ஒரு சிறிய சோதனைச் செலுத்தல் (test payment) செய்யப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பணம் செலுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் அசல் ஒப்பந்தத்துடன் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய ஹர்ஷ, இத்தகைய பாதுகாப்பு நடைமுறைகள் பொதுவானவை என்று வாதிட்டார்.
பொதுப்பணம் இழக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினையை வெறும் பணம் “காணாமல் போய்விட்டது” என்று கூறி தட்டிக்கழிக்க முடியாது என்றும், இதற்கு உரிய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொது நிதியைக் கண்காணிப்பது அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு என்பதால், விடயம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.



