திறைசேரி கொள்ளையுடன் எதிர்க்கட்சிக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – டி.பி. சரத்

நிதியமைச்சகத்தில் (மகா திறைசேரி) ஏற்படும் எந்தவொரு பாதிப்பும், நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களையும் நேரடியாகப் பாதிக்கும் ஒரு விடயமாகும் என பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
மகா திறைசேரியில் இடம்பெற்றுள்ள மோசடி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மகா திறைசேரியில் சுமார் 2.5 மில்லியன் அல்லது 5 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். பொதுவாக இவ்வாறான மோசடியைக் கண்டறிய சுமார் இரண்டு மாதங்கள் வரை எடுக்கும். எனினும், இது உத்தியோகபூர்வமாக வெளிவருவதற்கு முன்பே சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச போன்ற அரசியல்வாதிகள் இது குறித்து கேள்வி எழுப்புவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஹேக்கர்களிடமிருந்து தகவல்கள் கசிவதற்கு முன்பே, இவர்கள் மூலம் தகவல்கள் வெளிவருவதால், இவர்களுக்கும் இந்த மோசடிக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மகா திறைசேரிக்கு ஒரு ஆபத்து ஏற்படுவது என்பது நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு ஏற்படும் ஆபத்தாகும். ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்கள் இதனை ஒரு பாதிப்பாகக் கருதாதது வருத்தமளிப்பதாக அவர் கூறினார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், அரசியல் பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து, மகா திறைசேரி போன்ற அரச சொத்துக்களை அழிக்கும் பொது எதிரிக்கு எதிராகப் போராட வேண்டும் என பிரதி அமைச்சர் டி.பி. சரத் மேலும் தெரிவித்தார்.



