எரிபொருள் நெருக்கடி காரணமாக இம்முறை மே தினத்திற்கு கொழும்புக்கு லட்சக்கணக்கான மக்களை அழைத்து வரமாட்டோம் ; JVP பொதுச் செயலாளர் டில்வின் சில்வா
எரிபொருள் நெருக்கடி காரணமாக இம்முறை கொழும்பிற்கு லட்சக்கணக்கான மக்களை அழைத்து வரமாட்டோம்.. நாடு முழுவதும் 21 கூட்டங்கள் நடாத்தப்படும்.. – டில்வின்
இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியினால் நாடு முழுவதும் 21 மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். இன்று (29) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே தினக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் இலட்சக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் மிக வெற்றிகரமாக நடத்தப்பட்டதை நினைவு கூர்ந்த பொதுச் செயலாளர், இம்முறை அந்தத் தீர்மானத்தை மாற்றுவதற்கான காரணங்களை விளக்கினார்.
உலகளவில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிர்வகிப்பதற்கும், எரிசக்தி பாதுகாப்பிற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கிலும், இம்முறை மே தினக் கொண்டாட்டங்களை மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்கப்பட்ட முறையில் ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் மக்கள் நீண்ட தூரத்திலிருந்து கொழும்பிற்கு வருவதற்கு செலவாகும் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த முடியும் என தேசிய மக்கள் சக்தி நம்புகிறது.



