இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு தொடர்பில் மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை

2026 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளமையும், உள்நாட்டில் எரிபொருள் இறக்குமதி அளவு அதிகரித்துள்ளமையும் இதற்கு நேரடி காரணங்களாகும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், எரிபொருளுக்காக செலவிடப்பட்ட வெளிநாட்டு செலாவணி அளவில் தெளிவான வளர்ச்சி காணப்படுகிறது.
செலவுப் புள்ளிவிவரங்கள்
• 2025 மார்ச்: எரிபொருள் இறக்குமதிச் செலவு 360.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
• 2026 மார்ச்: இச்செலவு 630 மில்லியன் டொலர்கள் வரை 74.7% ஆல் அதிகரித்துள்ளது.
• 2026 முதல் காலாண்டு (ஜனவரி-மார்ச்): எரிபொருள் இறக்குமதிக்காக ஒட்டுமொத்தமாக 1,281.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 21.3% அதிகரிப்பாகும்.
எதிர்கால சவால்கள் மற்றும் பாதிப்புகள்
கடந்த தசாப்தத்தில் இலங்கையின் மொத்த இறக்குமதிச் செலவில் சுமார் 20% எரிபொருளுக்காக ஒதுக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டில் இதற்காக 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்ட நிலையில், தற்போதைய பூகோள அரசியல் நிலைமைகளால் 2026 இறுதிக்குள் இச்செலவு மேலும் அதிகரிக்கும் என மத்திய வங்கி கணித்துள்ளது.
ரூபாயின் பெறுமதி 2.9% ஆல் வீழ்ச்சியடைந்துள்ள (தேய்மானம்) பின்னணியில், இவ்வாறான செலவு அதிகரிப்பு நாட்டின் வெளிநாட்டு செலாவணி கையிருப்புக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூகப் பொருளாதார தாக்கம்
எரிபொருள் மற்றும் உரங்களின் விலை அதிகரிப்பு, விவசாய உற்பத்திச் செலவுகள் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் உயர்வதற்கு வழிவகுக்கும். மேலும், வரட்சியான காலநிலை நிலவும் பட்சத்தில், வெப்ப மின் உற்பத்திக்கான செலவும் இந்த அதிக விலையின்கீழ் பாரிய சவாலாக அமையும்.
இந்தச் சூழலில், எதிர்வரும் மாதங்களில் எரிபொருள் வில முகாமைத்துவம் மற்றும் வெளிநாட்டு செலாவணி கட்டுப்பாட்டை பேணுவது அரசாங்கத்திற்கும் மத்திய வங்கிக்கும் பாரிய பொறுப்பாக மாறியுள்ளது.



