News

அறுகம்பையில் கைதான பாணந்துறை இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நீதியை நிலைநாட்டுங்கள்

அறுகம்பையில் கைதான பாணந்துறை இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நீதியை நிலைநாட்டுங்கள் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மெளலவி மிப்லால் பகிரங்க அழைப்பு !

பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களுக்காக கிழக்கில் உள்ள சட்டத்தரணிகள் இனம், பிரதேச வேறுபாடுகள் பாராமல் மே 06ம் திகதி நீதிமன்றுக்கு சமூகமளித்து அந்த  இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹம்மத் மிப்லால் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

நாளுக்கு நாள் முஸ்லிங்களின் இருப்பு கேள்விக்குறியாகும் நிலை இலங்கையில் உருவாகி வருகிறது. முஸ்லிம் பெயர் தாங்கியவர்களாக, அடையாளம் தாங்கியவர்களாக இருந்தால் அரச பாதுகாப்பு இயந்திரம் உற்றுநோக்கும் நிலை இப்போது உருவாகியுள்ளது. பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்கள் பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்திற்கு கடந்த வாரம் சுற்றுலா சென்று அங்கு உணவருந்தவும், தங்குவதற்கும் நல்ல ஹோட்டல் தொடர்பில் விசாரித்தபோது பிரதேசவாசிகள் இஸ்ரேல் நாட்டவர்கள் தங்கும் பிரதேசம் நல்ல இடம் என்றும் அங்கே தான் நல்ல உயர்ரக ஹோட்டல்கள் இருப்பதாகவும் பரிந்துரைத்துள்ளனர்.

அதனடிப்படையில் அங்கு செல்ல முச்சக்கர வண்டி சாரதியிடம் கோரிய போதே பொலிஸாருக்கு  தகவல் வழங்கப்பட்டு பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை (30.04.2026) அன்று அவர்கள் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா செல்லும் எல்லோரும் ஒழுங்கான உணவகங்களை சுற்றுலா தளங்களில் தேடுவது வழமையே. அதற்காக கைது செய்வதென்பது எந்த வகையில் நியாயம்?

இனிவரும் காலங்களில் உதிர்ந்து விழும் இஸ்ரேல் நாட்டவர்களின் முடியை முஸ்லிங்கள் மிதித்தால் கூட பாதுகாப்பு தரப்பு கைது செய்வார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த இளைஞர்களுக்கு உதவிய அவர்களின் குடும்பத்தினரை கூட தீவிரமாக பாதுகாப்பு துறையினர் கண்காணிக்கும் நிலை இருக்கிறது. இஸ்ரேல் நாட்டவர்களினால் நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்தை விட அவர்களின் பாதுகாப்புக்கே அரசாங்கம் அதிக நிதியை செலவிடவேண்டியிருக்கிறது.

பொத்துவில் – அறுகம்பை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாணந்துறையைச் சேர்ந்த ஏழு முஸ்லிம் இளைஞர்களும் நீதித்துறை சரியாக செயற்பட்டமையால் 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் வழக்கு விசாரணை மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது கிழக்கில் உள்ள 100 கணக்கான சட்டத்தரணிகள் வேறுபாடுகள் பாராமல் நீதிமன்றுக்கு சமூகமளித்து சட்டத்தை காத்து மனித உரிமையை நிலைநாட்டி அந்த  இளைஞர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றும் பாராளுமன்ற அமர்வுகளில் இந்த அநீதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படியான நிலை தொடர்ந்தால் வெள்ளையர்கள் முதல் இப்போதைய ஆட்சி வரை நாட்டுக்கு விசுவாசமாக வாழும் முஸ்லிங்கள் இலங்கையில் எதிர்காலத்தில் நிம்மதியாக வாழ்வதில் பாரிய சவால் உருவாகும் என்றும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button