முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்தும் முஸ்லிம் மக்களுக்காக எதுவும் செய்யாமல், அவர்களை நம்பிய சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்ட நிலையில் முஸ்லிம் அமைச்சரே இல்லாத இந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு ஓரளவு நிம்மதி தருகிறது.
வில்பத்துவை காடு என மைத்திரி அரசு வர்த்தமாணி வெளியிட்டதால் காட்டை அழித்ததாக மைத்திரி அரசாங்கம் இருக்கும் போது வழக்கு போடப்பட்டதானது ரிசாத் பதியுதீன் அவசரப்பட்டு மைத்திரியை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் ஏற்பட்ட வினையாகும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவிக்கிறது.
முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன்160 கோடி ரூபாயை வில்பத்துவில் காடு வளர்க்கும் செலவாக வழங்க வேண்டும் என்று, மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியிருந்தது.
அந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் றிசாட் பதியுதீன் இப்போது மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
வில்பத்துவில் றிஷாட் பதியுதீனின் வழிகாட்டுதலில் காடுகள் அழிக்கப்பட்டதாகவும், அங்கு மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டி, றிஷாட் பதியுதீனுக்கு எதிராக சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் அமைப்பு 2015ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதன் முடிவில் அந்தக் குற்றங்களுக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை பொறுப்பாக்கிய நீதிமன்றம், வில்பத்துவில் அழிக்கப்பட்ட காடுகளை வளர்க்கும் செலவை, றிசாட் பதியுதீன் பொறுப்பேற்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
அதன்படி, வன வளத் திணைக்களம் மதிப்பீடு செய்தமைக்கு அமைய 1.6 பில்லியன் ரூபாயை, றிசாட் பதியுதீன் செலுத்த வேண்டும் என, தீர்ப்பில் கூறப்பட்டது.
இதில் விசேசம் என்னவென்றால் 2014 இறுதியில் மஹிந்தவிடம் இருந்து மைத்திரி, ரணில் பக்கம் அதிரடியாக பாய்ந்து ரிசாத் பதியுதீன் மைத்திரியை ஜனாதிபதி ஆக்கிய ஆட்சியின் போது, மைத்திரி ஜனாதிபதி, ரணில் பிரதமர் காலத்தில்தான் இந்த வழக்கு தொடரப்பட்டது.
வில்பத்துவில் இருந்த முஸ்லிம்களின் வாழ்விடங்கள் 90 முதல் காடாகி போயிருந்ததால் புதிய வர்த்தமாணி மூலம் அவற்றை காடு என அறிவித்தவர் மைத்திரி. ரிசாத் பதியுதீன் அமைச்சராக இருந்தும் இதனை தட்டிக்கேட்க முடியாதளவு பதவி மோகத்தில் மௌனமாக இருந்தார்.
முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்தும் தமது பிரதேச மக்களின் காணிகளை மீட்க முடியவில்லை என்றால் இவர்களை நம்பிய சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுள்ளது என்பதே உண்மை.
இதை வைத்து பார்க்கும் போது முஸ்லிம் அமைச்சரே இல்லாத இந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு ஓரளவு நிம்மதி தருகிறது.
மு. முஸ்னத்
தலைவர்.
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்


