மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் , திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்தது – பயணிகள் வேனிலிருந்து பாய்ந்து தப்பினர்
ஜவ்பர்கான்
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியிலுள்ள ஆரையம்பதி, ஒல்லிக்குளம் பகுதியில் நேற்று மாலை பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதமடைந்துள்ளது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்திருந்த குழுவொன்று, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி குறித்த வேனில் பயணித்துக்கொண்டிருந்தது. நேற்று மாலை ஆரையம்பதி, ஒல்லிக்குளம் பகுதியை வேன் கடந்தபோது, எதிர்பாராத விதமாக இயந்திரப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்திலேயே தீ வேன் முழுவதும் பரவியதுடன், வாகனம் முழுமையாக எரிந்து நாசமானது. இவ்விபத்து காரணமாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
எனினும், வேனில் தீப்பற்றியதை உடனடியாக அவதானித்த பயணிகள் வாகனத்திலிருந்து விரைவாக வெளியேறியதால், அவர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இந்தத் தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், இயந்திரக் கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாகக் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



