News

தமிழக சட்டசபை தேர்தலில் கள்ள ஒட்டுப்போட்ட இலங்கையர், விமான நிலையத்தில் வைத்து சிக்கிய சம்பவம் பதிவு #தமிழக பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கையர் உட்பட மூன்று வௌிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை, கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் குடியுமை பெற்ற மூவரே இவ்வாறு தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சென்னை அசோக் நகரை பூர்வீகமாக கொண்ட ஒருவர் கனடா நாட்டில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு கனடா நாட்டிற்கு சென்று மனைவி மற்றும் மகனுடன் அங்கேயே குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்.

இதற்கிடையே அவர் தனது சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் குடும்பத்துடன் சென்னை வந்து இருந்தார். அப்போது அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தார்.

இந்த நிலையில் மீண்டும் கனடா நாட்டிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு சென்ற போது அவரது கை விரலில் இருந்த மையை பார்த்து குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டது தெரியவந்துள்ளது.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடைமுறைக்கு பின்னர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படாததால் அடையாள அட்டையை பயன்படுத்தி ஓட்டு போட்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவரை கே.கே.நகர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த பொலிஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.

அதேநேரம், நேற்று இரவு விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த அஸ்திரேலியா நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர் மீண்டும் நாடு திரும்புவதற்காக விமான நிலையம் வந்தபோது அவரும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ஓட்டு போட்டது தெரியவந்தது. இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் தகவலின் பேரில் அவர் மீது விருகம்பாக்கம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் இலங்கை நாட்டு குடியுரிமை பெற்ற ஒருவரும் விமான நிலையம் வந்தபோது பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஓட்டு போட்டது தெரிய வந்தது. அவர் மீதும் கொடுங்கையூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில், த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். எனவே தேர்தலின் போது ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பதால் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button