2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிந்தவூரில் திட்டவட்டமாக அறிவிப்பு

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அம்பாறை நிந்தவூர் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் மீண்டும் பொளாதார நெருக்கடி ஏற்படும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வரும நிலையிலேயே ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையானது ஒரு வெளிப்புற நெருக்கடியாக இருந்தாலும், அதனையும் முகாமைத்துவம் செய்துகொள்ளக்கூடிய சக்தி அரசாங்கத்திடம் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், இனவாதத்திற்கு இடமளிக்காதிருத்தல், ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குதல், அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளைக் குறைப்பதே, தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக மக்கள் வழங்கிய மக்கள் ஆணையின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்கும் பொறுப்பு தமது அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்படாவிட்டால், வேறு எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் அது நிறைவேறாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அதிகாரம், செல்வம் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றைப் பார்க்காமல் அனைவருக்கும் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ஓய்வூதியம் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் எல்லையற்ற சலுகைகளை ஒழித்து, அரசியல்வாதிகள் அனைவரையும் மக்களுக்காகப் பணியாற்றும் ஒரு குழுவாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



