இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து வெளியேற முயன்ற இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஓமன் கடற்பகுதியில் இந்திய மாலுமிகள் அதிகம் நிறைந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதில் ஒரு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். இந்த சூழலில் ட்ரம்ப் அதற்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். “ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து சென்ற இந்திய கப்பல்கள் மீது அவர்கள் (ஈரான்) மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை ஏற்றுக் கொள்ளவே முடியாது” என அதில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பாலாவ்கொடி பொருத்தப்பட்ட ‘செட்டெபெல்லோ’ என்ற எண்ணெய் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து ஈரான் துறைமுகத்துக்கு நுழைய முயன்றது. இதில் உள்ள 28 மாலுமிகளில் 24 பேர் இந்தியர்கள். இந்த கப்பலுக்கு பிறப்பித்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை கடக்க முயன்றதாக அமெரிக்க இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து இந்த கப்பலின் இயந்திர அறை மீது அமெரிக்க போர் விமானம் குண்டு வீசி முடக்கியது. இதில் இந்திய மாலுமிகள் ஆதித்ய சர்மா, சிவானந்த் சவுரேஷியா, தலைமை பொறியாளர் பட்னாலா சுரேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்



