கத்தார் கடலில் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிறுத்தம்…

கத்தார் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக, அந்நாட்டின் அனைத்து கடல்சார் நடவடிக்கைகளையும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க கத்தார் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தாக்குதல் ஒன்றின் இடிபாடுகள் அல்லது ஏவுகணைத் துண்டுகள் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் வேளையில், இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமது குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மீன்பிடித்தல், உல்லாசப் பயணங்கள் மற்றும் கடல் சார்ந்த ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரை தடை செய்யப்படுவதாக கத்தார் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடலோர காவல்படையும் வலியுறுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மற்றும் பெர்சிய வளைகுடாப் பகுதியை ஒட்டி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் இராணுவ மோதல்கள் காரணமாக பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த கொடிய விபத்தும் அந்த யுத்த சூழ்நிலையின் விளைவாக இருக்கலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய நிலைமை குறித்து கத்தார் அரசாங்கம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டவுடன் இந்தத் தடை நீக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


