News

நாட்டில் தற்போது விவசாயம் நட்டமடையும் ஒரு தொழிலாக மாறியுள்ளது… ஆனால் அரசாங்கம் சிகரெட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்குகிறது ; சஜித் குற்றச்சாட்டு

அரசாங்கம் விவசாய உபகரணங்களுக்கு மேலும் வரிகளை விதித்துள்ள போதிலும், சிகரெட்டுகளுக்கு தொடர்ச்சியாக வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று (15) இடம்பெற்றது.

சுனில் கமகேவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடலில் பங்கேற்று அவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

2026 ஜனவரி முதல் ஜூலை 14 வரை சிகரெட் நிறுவனத்திற்கு 9.2 பில்லியன் இலங்கை ரூபாய் வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாயம் செய்வதற்குத் தேவையான விவசாய உபகரணங்களுக்கு அரசாங்கம் இந்த வரிச் சலுகைகள் பெற்றுக் கொடுக்கவில்லை.

சிகரெட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும், விவசாய உபகரணங்களுக்கு வரிச் சுமையை மேலும் மேலும் அதிகரிப்பதற்கே இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

நெற்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறி, அரசாங்கம் நிலையான விலையாக நாட்டு நெல்லுக்கு 120 ரூபாவும், சம்பாவிற்கு 130 ரூபாவும், கீரி சம்பாவிற்கு 140 ரூபாவும் என்ற அடிப்படையில் விலைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

ஆனால் தேர்தல் காலங்களில் வயல் வெளிகளுக்குள் இறங்கி நெற் கதிர்களைத் கடித்துக் கொண்டு, நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலையை நாட்டின் சட்டமாக மாற்றித் தருவோம் என்று பிரஸ்தாபித்தனர்.

முன்னர் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. நமது நாட்டில் சமகாலத்தில் விவசாயம் நட்டமடையும் ஒரு தொழிலாக மாறியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button