தங்க அனுமான் சிலையை 2,500 கோடிக்கு விற்பனை செய்ய போவதாகவும்.., இடைச் செலவுக்கு 2 கோடி முதலீடு செய்யக் கூறி, செல்வந்த தொழிலதிபர்களின் வாட்ஸ்அப் இற்கு மெசேஜ் அனுப்பி மோசடி

இலங்கையிலும் இந்தியாவிலும் அனுமான் சிலைகளை வழிபாட்டுப் பொருட்களாகப் போற்றும் மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலின் பின்னணி அம்பலமாகியுள்ளது.
போர்க் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்து வழிபடப்பட்டதாகக் கூறப்படும், தங்க முலாம் பூசப்பட்ட தடியுடன் கூடிய அனுமான் சிலை ஒன்று, கடந்த 2016 ஆம் ஆண்டு ஜா-எல – மெல்வத்த பகுதிக்கு இரகசியமாகக் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டதாக இந்த மோசடிக் கும்பல் பிரசாரம் செய்துள்ளது.
நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள அந்தச் சிலையை, இந்தியாவில் உள்ள ஒரு பூசாரிக்கு ரூபாய் 2,500 கோடிக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் இணையவழியில் தகவல்களைப் பரப்பியுள்ளனர்.
மேலும், இந்தச் சட்டவிரோத வர்த்தகத்திற்குப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகலவின் முழுமையான ஆதரவு இருப்பதாகக் கூறி மக்களை நம்ப வைக்க முயன்றுள்ளனர்.
புதைக்கப்பட்டுள்ள சிலையைத் தோண்டி எடுத்து இந்தியாவிற்கு அனுப்பும் வரை தேவைப்படும் இடைக்காலச் செலவுகளுக்காக ரூபாய் 2 கோடி தேவைப்படுவதாகக் கூறி, செல்வந்த தொழிலதிபர்களின் வாட்ஸ்அப் (WhatsApp) எண்களுக்கு இவர்கள் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.
“இது ஒரு சிறந்த வணிகம், இதில் முதலீடு செய்தால் உடனடியாகப் பெருந்தொகை இலாபமாகக் கிடைக்கும்” எனக் கூறி பலரிடம் பணத்தைப் பறிக்க இந்த கும்பல் திட்டம் தீட்டியுள்ளது.
இத்தகைய பின்னணியில் தனது பெயரைப் பயன்படுத்தி நடைபெறும் இந்த மோசடி குறித்துத் தகவலறிந்த பிரதி அமைச்சர் சுனில் வடகல, காவல்துறை தலைமை அதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் (CID) உடனடியாக முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து விசாரணைகளை முடுக்கிவிட்ட காவல்துறையினர், கொழும்பு பகுதியில் மற்றொரு நபரிடம் இந்த அனுமான் சிலை குறித்துப் பேசிப் பணத்தைப் பறிக்க முயன்றபோது, பிரதான சந்தேகநபரைச் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரின் கையடக்கத்தொலைபேசியைச் சோதனையிட்டதில், வாட்ஸ்அப் மூலமாகப் பலருக்கு இந்த மோசடி தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


