பரிசோதிக்கப்படாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பற்றிய தகவல்கள் எம்மிடம் இல்லை – சுங்கத் திணைக்களம் தெரிவிப்பு

பௌதிகப் பரிசோதனை (Physical Examination) எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் (Containers) தொடர்பாக எந்தவொரு தகவலோ அல்லது ஆவணங்களோ தங்களிடம் இல்லை என்று இலங்கைச் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
‘வினிவித பவுண்டேஷன்’ (Winivida Foundation) அமைப்பின் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு அவர்களால் 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கத் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே சுங்கத் திணைக்களம் இதனை வெளிப்படுத்தியுள்ளது.
பௌதிகப் பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்படாமல் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகளின் கீழ் சுங்கத்திலிருந்து வெளியேறிய கொள்கலன்களின் பட்டியலை நாகாநந்த கொடித்துவக்கு கோரியிருந்தார்.
இக்கோரிக்கை தொடர்பாக சுங்கப் பொருட்கள் பரிசோதனைப் பிரிவிடம் வினவப்பட்டபோது, குறித்த நடைமுறைகளின் கீழ் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பான எந்தவொரு ஆவணமும் அல்லது தகவலும் அப்பிரிவிடம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் தொடர்பாகத் திருப்தியடையாவிட்டால், 14 நாட்களுக்குள் மேல்முறையீடு (Appeal) செய்ய முடியும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



