எங்களது 159 பேரில் ஒரு திருடன் அல்லது ஊழல்வாதி இருந்தால் காட்டுங்கள்.. அப்படி யாரும் இல்லை.. நாங்கள் நேர்மையானவர்கள்…

தற்போதைய அரசாங்கத்தின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்லது சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்த எந்தவொரு நபரும் இல்லை என்றும், அப்படி யாராவது இருந்தால் அது குறித்துத் தெரிவிக்குமாறும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர மக்களுக்குச் சவால் விடுத்துள்ளார்.
‘ஹிரு’ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளவாறு, மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமைச்சர், தமது குழுவின் நேர்மை குறித்துத் தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த 159 பேரில் யாராவது ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டோ, தவறோ அல்லது சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்த குற்றச்சாட்டோ இருந்தால் கூறுங்கள்,” என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் தம் மீது வைத்த நம்பிக்கையை நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், தமது அடையாளத்தையும் கடமையையும் எவ்விதத்திலும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.
ஒரு தூய்மையான அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.



