கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியதாக அறிவித்தது

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களின் அபிவிருத்திக்காக அரசாங்கம் 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
42 ஆவது தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டங்களை முன்னிட்டு, மத நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சினால், முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை, தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக “எமது பள்ளிவாசலுக்கு நல்வரவு” எனும் தலைப்பில் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஏனைய மதத்தினருக்கு பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து அதன் கலாச்சாரம், வரலாறு மற்றும் மத நடைமுறைகள் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்கும்.
அனைத்து மதத்தினரிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வு, மரியாதை மற்றும் நல்லெண்ணத்தை வலுப்படுத்துவதோடு, ஒன்றிணைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான நல்லிணக்கப் பாலங்களை அமைப்பதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டு, அமைச்சர் விஜித ஹேரத் தனது பேஸ்புக் பதிவில் இத்திட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.



