News

அதிகளவான  வீடுகளில் நகை,பணம் திருட்டு  மற்றும் மோட்டார் சைக்கிள்  காணாமல் சென்ற சம்பவங்கள் அதிகரித்ததால் அம்பாறையில் பொலிஸாரால் பொதுமக்களுக்கு முக்கிய  அறிவித்தல்கள்

பொலிஸாரின் பொதுமக்களுக்கான முக்கிய  அறிவித்தல்

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டத்தின் அண்மைக்காலமாக பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்  பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் நிந்தவூர், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சாய்ந்தமருது, பெரிய நீலாவணை,  உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக வீரமுனை ,மருதமுனை, மண்டூர் , பகுதிகளிலும் அதிகளவான  வீடு உடைத்து நகை ,பணம் திருடுதல்  மற்றும் மோட்டார் சைக்கிள்  காணாமல் சென்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

குறித்த சட்டவிரோத சம்பவங்களில் வீடுகள்  உடைத்து திருடும் சம்பவம்  இரவு 1:00 மணிக்கும் அதிகாலை 4:30 மணிக்கும் இடையில் இடம்பெற்று வருவதுடன்  வீட்டின் ஜன்னல் கிறில் மற்றும் ஓடுகள்  பிரிக்கப்பட்டு  வீட்டு உரிமையாளர்கள்  ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது   இடம் பெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தவிர மோட்டார் சைக்கிள்  திருட்டுக்கள் சம காலங்களில் பல்வேறு பொலிஸ் நிலைய பகுதிகளிலும் அதிகரித்துள்ளன. பெரும்பாலும் பொது  இடங்களில் தரித்து வைக்கப்பட்ட நிலையிலும்   வயல் வேலை காரணமாக  வீதி ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில்   மோட்டார் சைக்கிள்கள் மற்றும்   முச்சக்கர வண்டியில் வைத்து விட்டு செல்லும்  பொருட்கள் உள்ளிட்டவைகள்  திருடப்பட்டு வருகின்றன.

மேலும் சில பொலிஸ் பிரிவுகளில் வைத்தியசாலை, பொதுச்சந்தை, நகரப் பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளமை சிசிடிவி காணொளிகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

எனவே இரவு நேரத்தில்   வீட்டின்  மறைவான இடங்களை பரீட்சித்து பெறுமதியான பொருட்களை பொதுமக்கள் பாதுகாப்பதுடன் ,  வீட்டின் ஜன்னலுக்காக பொருத்தப்படும்  கிறிலை  உறுதியான வகையில் பொருத்தி கொள்ளுமாறும் , சீலிங் பேன் பயன்படுத்தும் வீடுகளில் அதிக திருட்டுகள் இடம்பெறுவதனால்  அதிக சத்தம் இடும் இவ்வாறான  மின் விசிறிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுள்ளனர்.

அத்துடன்  பகல் நேரத்திலோ, இரவு நேரத்திலோ தேவையற்ற முறையில் சந்தேகத்திற்கிடமாக  மாஸ்க் மற்றும்  தொப்பி அல்லது  தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சட்டவிரோத செயற்பாடுகள் சம்பந்தமாக அவதானமாக இருப்பதுடன் சந்தேக நபர்கள்   தொடர்பாக தகவல் ஏதேனும்  தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்தமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්‍යවේදී

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button