அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய நாணயத்தை கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிக்கு டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு

அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய நாணயத்தை கொண்டுவர முயற்சிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் முயற்சிக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, ஈரான், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளுடன் சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, உறுப்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா அமெரிக்கா டொலருக்கு மாற்றாக பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்க முயற்சி செய்கின்றன.
இது குறித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் டொலர் பரிவர்த்தனையிலிருந்து விலகிச் செல்ல முயல்கின்றன.
இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது அமெரிக்க டொலருக்குப் பதிலாக வலிமைமிக்க வேறு எந்த நாணயத்தையும் உருவாக்க முயற்சி செய்தால், அவர்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் விற்பனை செய்வதிலிருந்து விடைபெறும் நிலை ஏற்படும்.
சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை பிரிக்ஸ் அமைப்பு மாற்றும் வாய்ப்பு இல்லை எனவும் எந்த நாடும் அமெரிக்காவின் டொலரை மாற்ற முடியாது எனவும் அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

