இளம் தம்பதியினர் மாதம்பை பகுதி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கெப் வண்டியுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மனைவி உயிரிழப்பு – கணவர் காயம்

புத்தளம் – பல்லம , அடம்மன பிரதேசத்தில் திங்கட்கிழமை (2) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாதம்பை , தனிமெல்கம பகுதியைச் சேர்ந்த ஏ.இந்திரா (வயது 30) எனும் பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவரது கணவரான 32 வயதுடைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல்லம பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தம்பதியினர் ஆனமடுவ, ஊரியாவ பகுதியில் மரண வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, மீண்டும் மாதம்பை பகுதியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, குறித்த கணவனும், மனைவியும் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிலாபத்தில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த கெப் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்து தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்

