அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள, சிறுமி துஷ்பிரயோக முறைப்பாடு தொடர்பில் அமைச்சர் சரோஜா போல்ராஜின் விசேட அறிவிப்பு

அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள, மைனர் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்காக இந்த முறைப்பாட்டை இலங்கை பொலிஸாரே முன்னெடுத்துச் செல்வதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட சிறுமியை நீதிமன்றத்திலோ அல்லது ஏதேனும் வெளிப்புறத் தரப்பினரிடமோ வெளிப்படுத்த வேண்டிய அவசியம் எவ்வகையிலும் இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், சிறுமி வழங்கிய ஆரம்பக்கட்ட வாக்குமூலத்தில் இருந்து இதுவரையில் வழங்கப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் கண்டறியப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இந்த வழக்கை முன்னோக்கி கொண்டு செல்லும் திறன் பொலிஸாருக்கு உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை சீர்குலைக்க எதிர்க்கட்சியினரும் ஏனைய குழுக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் தனிப்பட்ட விபரங்கள் மற்றும் இந்த வழக்குடன் தொடர்புடைய விசாரணை விபரங்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு அவர் ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


