352 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹாசிஸ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த கனடா இளம்பெண் கட்டுநாயக்கவில் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 18 வயதுடைய கனடா நாட்டு யுவதி ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரது சாமான்களில் (Luggage) மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 352.65 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 36 கிலோகிராம் ஹாசிஸ் (Hashish) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை அடுத்தே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் டொராண்டோவில் இருந்து துபாய் ஊடாக எமிரேட்ஸ் விமானத்தில் இரவு 10:40 மணியளவில் வருகை தந்துள்ளார்.
வழக்கமான சோதனைகளின் போது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் அவரை இடைமறித்தனர்.
அவரது இரண்டு பயணப்பைகளை சோதனையிட்ட போது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35.265 கிலோகிராம் ஹாசிஸ் போதைப்பொருளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.



