மக்களுக்கு நியாயமான வரி முறையை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்

மக்களுக்கு நியாயமான வரி முறையை அறிமுகப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார்.
நல்லாட்சியில் நிதி ஸ்திரத்தன்மை மிக முக்கியமானது. கடந்த காலத்தில் பொருளாதார மேலாண்மை இன்மை காரணமாகவே அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது.
தற்போது அறவிடப்படும் 18% VAT வரியும் அதிகம். நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலம், எதிர்காலத்தில் இந்த வரி விகிதத்தைக் குறைக்க முடியும்.
டிஜிட்டல் சேவை வரி மூலம் உள்ளூர் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை. ஊபர் மற்றும் பிக்மி போன்ற நிறுவனங்கள் வழங்கும் மென்பொருள் சார்ந்த போக்குவரத்து சேவைகளுக்கே இந்த ஒழுங்குமுறைகள் பொருந்தும். மென்பொருள்கள் மீது நாங்கள் வரி விதிக்கவில்லை.
வணிகங்களை இந்த முறைமைக்குள் முறையாக இணைப்பதன் மூலம், எதிர்காலத்தில் 18% VAT வரியைக் குறைப்பது குறித்து கலந்துரையாட முடியும். தற்போது வழங்கப்படும் இரண்டு வரி அறிக்கைகளுக்குப் பதிலாக ஒரே அறிக்கையை வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும். வரி நிர்வாகத்தை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.


