இந்த நாட்டில் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட 46,000 சிறுவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை ; சஜித்

துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட சுமார் 46,000 சிறுவர்கள் இன்னும் நீதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தாமதமின்றி சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்களை கையாள்வதில் ஏற்படும் தாமதம் குறித்து கேள்வி எழுப்பிய பிரேமதாச, பல பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் சிறுவர் பருவத்தில் நீதி கிடைக்கவில்லை என்று கூறியதுடன், சரியான தீர்வை உறுதி செய்ய அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கை குறித்து குறிப்பிட்ட அவர், இது 2019 இல் தொடங்கப்பட்டு 2025 க்குள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அரசாங்கம் தற்போது அதன் அமலாக்கத்தை 2029 ஆம் ஆண்டிற்கு தள்ளியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். 2024 ஆம் ஆண்டு ஆணைப் பத்திரத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை எவ்வாறு இவ்வாறு ஒத்திவைக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், இது சிறுவர்களுக்கு இழைக்கப்படும் கடுமையான அநீதி என்றார்.
சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும், இந்த வருடமே கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்துவது உட்பட, தமது கட்சி ஆதரவளிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நீதிமன்றங்களில் தற்போது சுமார் 4,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், விரைவான விசாரணைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், 46,000 புகார்தாரர்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்கும், விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கும் ஜனாதிபதியின் கீழ் ஒரு சிறப்பு பணிக்குழுவை அமைக்குமாறு பிரேமதாச கேட்டுக்கொண்டதுடன், இந்த பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது என்றும் கூறினார்.
சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு அவரும் சமகி ஜன பலவேகயவும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


