கோட்டாபயவின் காலத்தில் ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய ரூ. 154 செலவானது ! இப்போது அவ்வளவு செலவாவதில்லை!
ஒரு கிலோ நெல்லுக்கான உற்பத்திச் செலவு 154 ரூபா வரை ஏற்பட்டதாக தாம் குறிப்பிட்டது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திற்குரியது என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்:
“இப்போது நான் 150 ரூபாய் பற்றிய கதையைக் கூறியதாகப் பேசுகிறார்கள். ஆம், அந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு கிலோ நெல்லின் உற்பத்திச் செலவு கிட்டத்தட்ட 154 ரூபாயாக இருந்தது என்று நான் கூறினேன்.
அந்தச் சமயத்தில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் இருந்தனர். அவர்கள் உர இறக்குமதியைத் தடை செய்தார்கள். இன்று உரம் இலவசமாக வழங்கப்பட்டது, 350 ரூபாய்க்கு வழங்கப்பட்டது என்று கூறுபவர்களே அன்று உரத்தைத் தடை செய்தார்கள்.
அக்காலத்தில் ஒரு மூட்டை உரத்தின் விலை 40,000 முதல் 50,000 ரூபாய் வரை உயர்ந்தது. அதன் பின்னர் டிராக்டர் கட்டணங்களும் அதிகரித்தன. அதே நேரத்தில் விளைச்சலும் குறைந்தது. இதனால் ஒட்டுமொத்த உற்பத்திச் செலவைக் கணக்கிட்டபோது அது 150 ரூபாயைத் தாண்டியது. அதையே நாம் அன்று கூறினோம்” என்றார்.



