பழிவாங்கல் அரசாங்கத்தின் பணியாக மாறும்போது, ஆட்சி அதன் முதல் பலியாகிவிடும் என அலிசப்ரி அரசை எச்சரித்தார்
முன்னாள் நீதியமைச்சரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, அரசியல் எதிரிகளை கைது செய்வதிலும் தண்டிப்பதிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதால், நாட்டின் அவசர சவால்களிலிருந்து கவனம் திசைதிருப்பப்பட்டுள்ளதாகக் கூறி, அரசியல் பழிவாங்கல்கள் ஆட்சியை விட மேலோங்க அரசாங்கம் அனுமதித்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கொடிய மோதலைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஒரு அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பு அதன் முன்னோடிகளைத் துரத்துவது அல்ல, மாறாக தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதே ஆகும் என்று சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு அரசாங்கத்தின் முதன்மைப் பணி அதன் அரசியல் எதிரிகளையும் முன்னோடிகளையும் துரத்துவது, கைது செய்வது, தடுத்து வைப்பது மற்றும் தண்டிப்பது என்பதாக மாறும்போது, ஆட்சியின் உண்மையான பணிகள் பாதிக்கப்படத் தொடங்குவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
டெங்கு பரவல், கடுமையான சிறைச்சாலை நெரிசல், விவசாயிகளின் நியாயமான விலைக்கான கோரிக்கைகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல முக்கியப் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் பதிலளிப்பு குறித்து சப்ரி கேள்வி எழுப்பியுள்ளதுடன், இவையே ஆட்சியின் உண்மையான சோதனைகள் என்றும் வாதாடியுள்ளார்.
கைதுகளும் தண்டனைகளும் தலைப்புச் செய்திகளை உருவாக்கலாமே தவிர, அவை பொதுக் கொள்கையாகாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கைவிலங்கு என்பது ஒரு சுகாதாரக் கொள்கை அல்ல. ஒரு விளக்கமறியல் உத்தரவு என்பது ஒரு விவசாயக் கொள்கை அல்ல. ஒரு வழக்குத் தொடரல் என்பது ஒரு பொருளாதாரத் திட்டம் அல்ல. மேலும் ஒரு சிறைக்கூடு என்பது நல்லாட்சிக்கான சான்றும் அல்ல” என்று அவர் கூறியுள்ளார்.
நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை இன்றியமையாதவை என்பதை வலியுறுத்திய சப்ரி, விசாரணைகளும் வழக்குத் தொடரல்களும் அரசியல் நோக்கங்களுக்குப் பதிலாக, சட்டபூர்வமானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும் மற்றும் நம்பகமான சான்றுகளின் அடிப்படையிலும் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
நிறுவன ரீதியிலான பாதுகாப்புகளை பலவீனப்படுத்துவதற்கு எதிராக எச்சரித்த அவர், அரசியல் அதிகாரம் தற்காலிகமானது, ஆனால் முன்னுதாரணங்கள் நிலைத்திருக்கும் என்பதை அரசாங்கங்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
“இன்று நீங்கள் கொண்டாடும் வற்புறுத்தலின் இயந்திரம், நாளை வேறு ஒருவரால் மரபுரிமையாகப் பெறப்படலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கங்கள் பழிவாங்கலையும் ஆட்சியையும் குழப்பிக்கொள்ளக் கூடாது என்று முடித்த சப்ரி, “பழிவாங்கல் அரசாங்கத்தின் பணியாக மாறும்போது, ஆட்சி அதன் முதல் பலியாகிவிடும்” என்று எச்சரித்துள்ளார்.



