மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதற்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவன் கைது #இலங்கை
சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரியும் 25 வயதுடைய தனது மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைத் திரட்டுவதற்காக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவனும், அந்த ஆசிரியையும் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாதாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரான கணவரிடமிருந்து 01 கிலோ 06 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், சந்தேக நபரான ஆசிரியையிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வேன் ஒன்றின் முன்பகுதியில் வைத்துக்கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு, மாதாம்பிட்டிய பகுதியில் விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாதாம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நலின் ஸ்ரீயந்தவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, சந்தேக நபரான தம்பதியினர் மாதாம்பிட்டிய மதஸ்தலம் ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வேனில் இருந்த சந்தேக நபரான தம்பதியினரை சோதனையிட்ட போது அவர்களிடம் இந்த ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும், சந்தேக நபரான தம்பதியினரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவை வெலிசர பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.



