பெண் பொலிஸ் அதிகாரியின் மடியில் அமர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த மற்றுமொரு காவலர் #தம்புள்ளை
இசை நிகழ்ச்சி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவருக்கு, சக காவலர் ஒருவர் மடியில் அமர்ந்து அந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளை ‘கம் உதாவா’ மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்புப் பணியின் போது, அந்த பெண் காவலர் அமர்ந்திருந்தபோது, மது போதையில் வந்த மற்றுமொரு காவலர், பெண் காவலரின் மடியில் வலுக்கட்டாயமாக அமர்ந்து அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த நபர் மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் என்பது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட அந்த பெண் காவலரும் அதே மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவரே என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட காவலர், நீதிமன்ற மருத்துவரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர் கடும் மது போதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
சக பணியாளருக்கே இத்தகைய இழிவான செயலைச் செய்த அந்த காவலர் மீது தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடமையில் இருக்கும்போது, அதுவும் பாதுகாப்புப் பணியின் போது சக பெண் ஊழியருக்கு நேர்ந்த இந்த அவலம், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறும் இத்தகைய செயல்கள், பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



