News

டெங்கு ஒழிப்புக்காக வீடொன்றைச் சோதனையிட்ட போது வீட்டில் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிப்பு – வீட்டின் உரிமையாளரான பெண்ணும் கைது

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, பெலவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனையொன்றின் போது, வீடொன்றிலிருந்து துப்பாக்கியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால், இராணுவம், விமானப்படை, இலங்கை பொலிஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நேற்று (22) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெருமளவிலான நாய்கள் வளர்க்கப்படும், மிகவும் அசுத்தமான நிலையில் காணப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து உயிருள்ள டெங்கு நுளம்புக் குடம்பிகள் மற்றும் குறித்த துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பொலிஸாரால் குறித்த துப்பாக்கி பொறுப்பேற்கப்பட்டதுடன், வீட்டின் உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிருள்ள நுளம்புக் குடம்பிகள் காணப்பட்ட மற்றுமொரு வீட்டைச் சோதனையிட்ட போது, அவ்வீட்டின் உரிமையாளர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் நுளம்புக் குடம்பிகளுடன் வளாகங்களைப் பேணிய குற்றத்தின் கீழ், இந்த நடவடிக்கையின் போது இனங்காணப்பட்ட 13 நபர்களுக்கு எதிராகக் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை உடனடியாக அழித்து, டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button