சிரியாவில் சுமார் 5 இலட்சம் பேர் உயிரிழந்த நிலையில், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு மரண தண்டனை தீர்ப்பு
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் (Bashar al-Assad) 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி அன்று கிளர்ச்சியாளர்கள் நாட்டின் தலைநகரான டமாஸ்கஸைக் கைப்பற்றியதை அடுத்து நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார்.. இந்நிலையில்,
சிரியாவில் 14 ஆண்டுகளாக இடம்பெற்ற மோதல்களின்போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்காக, பதவியிழந்த முன்னாள் சிரிய ஜனாதிபதி பாஷர் அல்-அசாத் மற்றும் அவரது இளைய சகோதரருக்கு சிரிய நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (11) மரண தண்டனை விதித்துள்ளது.
குறித்த மோதல்களில் சுமார் 5 இலட்சம் பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவில் கிளர்ச்சி உருவாகக் காரணமான தெற்கு மாகாணமான டாராவில் இடம்பெற்ற ஒடுக்குமுறையை முன்னின்று நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அசாத்தின் தாய்வழி உறவினரான ஆதேப் நஜிப்புக்கும் இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், கைதி சீருடையில் கூண்டுக்குள் நின்றிருந்த நஜிப் முன்னிலையில் நீதிபதி தீர்ப்பை வாசித்துள்ளார்.
2024 டிசம்பரில் கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸை கைப்பற்றியதைத் தொடர்ந்து, அசாத்தும் அவரது சகோதரரும் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆதேப் நஜிப், விசாரணையை எதிர்கொண்ட முன்னாள் ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
முன்னாள் சிரிய இராணுவ பிரிகேடியர் ஜெனரலான நஜிப், 2011ஆம் ஆண்டு அசாத்தின் ஆட்சிக் காலத்தில் தெற்கு சிரியாவின் டாரா மாகாணத்தில் அரசியல் பாதுகாப்புப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.



